வைகாசி விசாகம்: பகை நீங்கி மன நிம்மதி பெருக
முருகப்பெருமானை வழிபட உகந்த நாள்கள் ஒவ்வொரு மாதமும் வரும் சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம், விசாக நட்சத்திரம் ஆகியன. இவை தவிர்த்து தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை, கந்தசஷ்டிப் பெருவிழா ஆகியவை மிகவும் முக்கியமானவை. அவற்றுள் தனிச்சிறப்போடு திகழும் தன்மை கொண்டது வைகாசி விசாகம்.
முருகனுக்கு விசாகன் என்ற திருப்பெயரும் உண்டு. விசாக நட்சத்திரத்தில் அவதரித்தவர் என்பதால் அந்தத் திருநாமம் வந்தது என்று சொல்வார்கள். அதேவேளை சாகன் என்றால் சஞ்சரிப்பவர் – வி என்றால் பறவை என்று பொருள். விசாகன் என்றால் பறவையின் மீதேறி சஞ்சரிப்பவன் என்று பொருள். மயில் என்னும் பறவையின் மீதேறி முருகப்பெருமான் சஞ்சரிப்பவர் என்பதே விசாகன் என்பதன் பொருள்.
வைகாசி விசாகம் வழிபடுவது எப்படி?
இந்த ஆண்டு வைகாசி விசாகம் இன்று (12.6.2022) கொண்டாடப்படுறது. முருகப்பெருமான் ஆலயங்களில் கடந்த பத்து நாள்களாக உற்சவங்கள் நடைபெற்று வருகின்றன. இன்று வைகாசி விசாகத்தை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் முருகப்பெருமானை வழிபடுவார்கள். இந்த நாளில் ஆலயம் சென்று வழிபாடு செய்வது மிகவும் விசேஷம். இயலாதவர்கள் தங்கள் வீட்டிலேயே முருகப்பெருமானின் படத்தை வைத்து வழிபடலாம்.
பொதுவாக வைகாசி விசாக தினத்தன்று வழிபாடுகள் செய்தால் செய்தால் பகை நீங்கும். பாவங்கள் விலகும். முன்வினைப் பயன்கள் நீங்கும். திருமண வரம் கைகூடும். வேண்டும் வரம் கிடைக்கும். காரியத்தடைகள் நீங்கி வெற்றிகள் குவியும் என்பது நம்பிக்கை. எனவே அனைவரும் தவறாமல் இன்று முருகப்பெருமானை வழிபட்டு சகல வரங்களையும் பெறுவோம்.
உங்கள் பிறந்தநாள்/திருமண நாளில் வாழ்த்துகளைப் பெற இங்கே கிளிக் செய்யவும்