வெள்ளை பிள்ளையார் பற்றி தெரியுமா?
இந்திரன் உருவாக்கிய விநாயகர்
பாற்கடல் நுரையால் செய்யப்பட்ட விநாயகர் என்பதாலேயே அவர் வெள்ளை நிறத்தில் இருக்கிறார் என்றும், இவரை வழிபட்டால் காரியத்தடைகள் நீங்கி வெற்றிகிடைக்கும் என்றும் சொல்லப்படுகிறது.
கும்பகோணத்திலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்ரீசெஞ்சடைநாதர் சிவன் கோவிலில், திருவலஞ்சுழி எனும் வெள்ளை வாரணப் பிள்ளையார் அருள்புரிகிறார். இந்த விநாயகரை இந்திரன் உருவாக்கியதாகப் புராணம் கூறுகிறது.
அமிர்தம்
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி பாற்கடலைக் கடைந்தபோது பல தடைகள் ஏற்பட்டன.
விநாயகரை வழிபடாமல் செயல்பட்டதால்தான் இவ்வாறு நிகழ்கிறது என்பதை உணர்ந்த இந்திரன், உடனே கடல் நுரையால் ஒரு விநாயகரை உருவாக்கி வழிபட்டு பின் முயற்சியைத் தொடர்ந்தான். அதனால் அமிர்தமும் கிடைத்தது.
இந்த விநாயகரை வழிபட அனைவரும் போட்டி போட்டார்கள். இறுதியில் கிருதயுகத்தில் திருக்கயிலையிலும், திரேதாயுகத்தில் வைகுண்டத்திலும், துவாபரயுகத்தில் சத்யலோகத்திலும், கலியுகத்தில் பூலோகத்திலும் வழிபடுவதென தேவர்கள் முடிவெடுத்தார்கள்.
அதன்படி இந்த விநாயகர் தற்போது இங்கு அருள்புரிகிறார்.கடல்நுரையாலான இவர் அளவில் சிறியவர். இவருக்கு அபிஷேகம் கிடையாது. பச்சைக் கற்பூரம் மட்டுமே சாற்றுவர்.
இவ்வாலய உற்சவ விநாயகப் பெருமான், வேணி- கமலை எனும் இரு சக்திகளுக்கு மத்தியில் அமர்ந்துள்ளார்.
வடநாட்டில் வெண்பளிங்குக் கல்லாலான விநாயகரை பல இடங்களில் தரிசிக்கலாம். தமிழகத்தில் வெள்ளை நிறத்தில் விநாயகரை தரிசிப்பது அரிது.
ஆனால் தற்பொழுது வெள்ளைப் பளிங்குக் கல்லால் உருவாக்கப்பட்ட வெண்விநாயகர், மயிலாடுதுறை கூறைநாடு ஸ்ரீநவசக்தி சாரதாதேவி கோவிலில் பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறார்.
ராஜராஜ சோழன் வழிபட்ட திருவலஞ்சுழிநாதரை வணங்கி வேண்டிக்கொள்ளத் திருமணப்பேறு கிட்டும். வெள்ளை விநாயகரை வணங்க மன விருப்பங்கள் நிறைவேறும். பகைவர்களால் உண்டாகும் தொல்லைகள் நீங்கி போட்டி பந்தயங்களில் வெற்றி கிட்டும் என்கின்றனர் பக்தர்கள்.
வெள்ளைப் பிள்ளையார் கோயில் தஞ்சாவூர் நகரின் மத்தியில் உள்ள விநாயகர் கோயில் ஆகும். திருவலஞ்சுழியிலும் வெள்ளை விநாயகர் கோயில் என்ற கோயில் உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் இப்பெயரில் உள்ள கோயில்கள் இந்த இரண்டு கோயில்களும் ஆகும்.
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம்
தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். தஞ்சாவூர் நகரின் மத்தியில் கீழவாசலில் இக்கோயில் அமைந்துள்ளது. தஞ்சாவூர் நகரின் முக்கியமான விநாயகரில் இதுவும் ஒன்று.
தஞ்சைப் பெரிய கோயில் அருகில் வடக்குத் திசையில் இக்கோயில் நகரின் முக்கியமான பகுதியில் அமைந்துள்ளது.
இங்கு கணபதி வெள்ளைப் பிள்ளையாராக கிழக்கு நோக்கியுள்ளார். ’வல்லபை’யுடன் எழுந்தருளி இருப்பதால் வல்லபை விநாயகர் ஆவார். பேச்சு வழக்கில் வெள்ளைப்பிள்ளையார் என்றே அழைக்கிறார்கள்.
கணபதிப்பெருமானை வெள்ளை விநாயகராக ஆவாகித்து வழிபடுவது ஒரு மரபாகும். இதனைச் சுவேத விநாயகர் எனக் குறிப்பர். ‘சுவேத விநாயகர் கல்பம்‘ என்றொரு நூலும் உண்டு. திருவலஞ்சுழி வலஞ்சுழிநாதர் கோயில் வளாகத்தில் சுவேத விநாயகர் ஆலயம் சோழர் காலத்திலேயே எடுக்கப்பெற்றுள்ளது.
தஞ்சாவூர்க் கோட்டையின் கிழக்கு வாசலுக்கு எதிரில், அகழியின் வெளிப்புறம் இரண்டு கோயில்கள் உள்ளன. வடபுறம் உள்ள கோயில் வெள்ளை விநாயகர் கோயிலாகும். இக்கோயில் தஞ்சை நாயக்க மன்னர்களால் கட்டப்பட்ட கோவிலாகும்.
மன்னர் விஜயராகவநாயக்கர் காலத்தில் இந்த விநாயகப் பெருமானைப் போற்றும் வகையில் ‘வெள்ளைப் பிள்ளையார் குறவஞ்சி‘ என்ற சிறுநூல் ஒன்று எழுந்துள்ளது. இந்நூலின் இறுதிப்பாடலில் ‘விஜயராகவ நாயக்கர் வாழி, ‘தளவாய் வேங்டந்திரன் வாழி‘ என்ற வரிகள் உள்ளன.
வெள்ளை பிள்ளையார் பற்றி தெரியுமா?
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.