தினம் ஒரு திருக்கோயில்-திருத்தணிகை
திருத்தணிகை முருகன் கோயில்
முருகனின் ஆறுபடை வீடுகளில், ஐந்தாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது இந்தியாவின், வடதமிழ்நாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி மலையில் அமைந்துள்ளது.
இது முருகப் பெருமான் வள்ளியை திருமணம் செய்து கொண்ட தலமாகும். ஆண்டின் 365 நாட்களை குறிக்கும்படியாக, 365 படிகளைக் கொண்டது இந்த மலைக்கோயில்.
திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமாகும். முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம். இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
வரலாறு:
சங்க காலப் புலவரான நக்கீரர் இயற்றிய திருமுருகாற்றுப்படையில் இக்கோயில் குறித்த குறிப்புகள் காணப்படுகிறது.
இக்கோயில் விசயநகர மன்னர்களாலும், உள்ளூர் நிலக்கிழார்களாலும் பேணப்பட்டு வந்தது.
தல வரலாறு:
தேவர்களுக்குத் தீராத துன்பம் கொடுத்து வந்த சூரபத்மனுடன் போர் புரிந்து தேவர்களின் துயரத்தை நீக்கி, வள்ளியை மணந்து கொள்ள வேடர்களுடன் விளையாட்டாகப் போர் புரிந்து, முருகப்பெருமான் கோபம் தணிந்து அமர்ந்த தலம் திருத்தணி ஆகும்.
ஆகையால் இந்த தலம் தணிகை எனப் பெயர் பெற்றது.முருகன் இத்தலத்தில் ஒரு தனி மலையில் கிழக்கு நோக்கி எழுந்தருளி உள்ளார்.
தேவர்கள் பயம் நீங்கிய இடம், முனிவர்கள் காமவெகுளி மயக்கங்களாகிய பகைகள் தணியும் இடம், அடியார்களின் துன்பம், கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் தணிக்கும் இடமாதலாலும், திருத்தணி என பெயர் பெற்றது.
இம்மலையின் இரு பக்கங்களிலும் மலைத் தொடர்ச்சி பரவியுள்ளது. வடக்கே உள்ள மலை வெண்மையாக இருப்பதால் பச்சரிசி மலையென்றும், தெற்கே உள்ள மலை கருநிறமாக இருப்பதால் புண்ணாக்கு மலை என்றும் அழைக்கப்படுகிறது.
சரவணப் பொய்கை என்ற புகழ்மிக்க குமார தீர்த்தம் என்ற திருக்குளம் மலைஅடிவாரத்தில் உள்ளது. இத்திருக்குளத்தைச் சுற்றி பல மடங்கள் இருப்பதால் இது மடம் கிராமம் என்று அழைக்கப்படுகிறது.
குளத்தின் கிழக்குக் கரையிலிருந்து மலையைப் பார்த்தால் வளைவாக இடப்பெற்ற மாலையைப் போல் இருக்கும்.
அக்காட்சி மிகவும் அழகாகத் திகழும். ஆகையால் அருணகிரிநாதர் இதை அழகு திருத்தணி மலை எனப் புகழ்ந்து பாடியுள்ளார்.
கோயில் அமைப்பு:
இந்த கோயில் தணிகை மலை என்ற மலையில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஐந்து அடுக்கு கோபுரம் மற்றும் நான்கு வளாகங்கள் உள்ளன.
இக்கோயிலுடன் தொடர்புடைய பல நீர்நிலைகள் உள்ளன. இத்தலத்தில் முருகன் வலக்கையில் சக்தி ஹஸ்தம் எனப்படும் வஜ்ரவேலுடன் (இடி போன்ற ஓசையெழுப்பும் சூலம் போன்ற கருவி) இடக்கையை தொடையில் வைத்து ஞான சக்திபெற்றவராகக் காட்சி தருகிறார்.
மற்ற கோயில்களில் உள்ளது இந்த முருகனிடம் வேல் கிடையாது. அலங்காரத்தின் போது மட்டுமே தனியே வேல், சேவல் கொடி வைக்கின்றனர். வள்ளி, தெய்வானை இருவருக்கும் தனித்தனி சந்நிதிகள் உள்ளன.
திறக்கும் நேரம்
வழக்கமாக காலை 5:45 மணி முதல் இரவு 09:00 மணி வரை கோயில் திறந்திருக்கும். சிறப்பு நாட்களில், கோயில் முழு நாளிலும் மதியம் 12 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும்.
அமைவிடம்
அரக்கோணத்தில் இருந்து 18 கி.மீ. தொலைவிலும், சென்னைக்கு வடமேற்கே 84 கி.மீ. தொலைவிலும், ஆந்திர மாநில எல்லைக்கு அருகே திருத்தணி அமைந்துள்ளது. சென்னையிலிருந்து, திருத்தணி செல்ல பேருந்து மற்றும் தொடருந்து வசதிகள் உள்ளது.
தினம் ஒரு திருக்கோயில்-திருத்தணிகை
திருவிழாக்கள்
- டிசம்பர் 31 – படித்திருவிழா
- ஆடிக்கிருத்திகை
- கந்தசஷ்டி
- பங்குனி உத்திரம்
- தைப்பூசம்
- ஆடித் தெப்பத் திருவிழா
ஐப்பசி மாதம் தீபாவளிக் கொண்டாட்டத்துக்குப் பிறகு அனைவரும் எதிர்நோக்கும் திருவிழா, கந்த சஷ்டிப் பெருவிழாதான்.
ஐப்பசி அமாவாசைக்கு அடுத்து வரும் ஆறுநாள்களும் முருகன் குடிகொண்டிருக்கும் ஆலயங்களில் எல்லாம் கந்த சஷ்டி விழா களைகட்டும்.
முருக பக்தர்கள் அனைவரும் விரதம் அனுஷ்டித்து, சதா சர்வ காலமும் முருகப்பெருமானின் நினைவிலேயே லயித்திருப்பார்கள்.
முருகப்பெருமானின் துதிப்பாடல்களைப் பாடுவதும், அவன் குடியிருக்கும் ஆலயங்களைத் தேடித் தேடிச் சென்று தரிசிப்பதுமாக முருகன் நினைவிலேயே நாளும் பொழுதும் தங்களைக் கரைத்துக்கொண்டிருப்பார்கள்.
திருத்தனியின் சிறப்புகள்
சஷ்டியின் நிறைவு நாளான ஆறாவது நாள், உணவும் நீரும் இல்லாமல் சிரத்தையுடன் விரதம் இருந்து, அன்று மாலை சூரபத்மனையும் அவனுடைய சகோதரர்களையும் முருகப்பெருமான் சம்ஹாரம் செய்யும் அற்புதத்தைக் கண்டு மகிழ்வார்கள்.
அப்போதே அவர்களுடைய மனங்களில், ‘இனி தங்கள் வாழ்க்கையில் தொல்லைகளும் துன்பங்களும் தொடராது.
தங்கள் மனங்களில் அசுர குணம் தலையெடுக்காது’ என்ற எண்ணம் ஏற்பட்டு, முருகப்பெருமானை பக்திப் பெருக்குடன் வழிபட்டு, மறுநாள் காலை விரதத்தை நிறைவு செய்வார்கள்.
அனைத்து முருகத் தலங்களிலும் கந்த சஷ்டித் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும்.
அதே தருணத்தில், முருகப்பெருமானின் ஒரு படைவீடு மட்டும் எந்த விதமான ஆரவாரமும் இல்லாமல், அமைதியாக இருக்கிறதென்றால் வியப்பாக இருக்கிறதல்லவா?
அந்தத் தலம்தான் திருத்தணிகை திருத்தலம்! ஐங்கரன் தம்பியின் ஐந்தாவது திருத்தலம் அது!
முருகப்பெருமான் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால், அங்கே சூரசம்ஹாரம் நிகழ்வதில்லை.
அங்கே அன்பும் கருணையும் மட்டுமே கொண்டு அருள்புரிகிறான். வள்ளியை மணம் புரிந்ததால் ஏற்பட்ட விளைவு அது!
சினம் தணிந்து அமர்ந்த காரணத்தினால்தான், அவனைத் தரிசிக்கும்போது நம்முடைய வல்வினைகளும், வருத்தும் பிணிகளும் அவன் அருளால் தணிந்து போகின்றன.
அதனாலும் இந்தத் தலம் ‘தணிகை’ என்று பெயர் பெற்றதாகவும் கூறுவர். முருகப் பெருமானின் சினம் தணிந்து அருளும் தலம் என்பதால்தான் திருத்தணியில் மட்டும் சூரசம்ஹாரம் திருவிழா நடைபெறுவதில்லை.
சூரசம்ஹாரம் நடைபெறாமல் கந்த சஷ்டி விழா மட்டும் ஐதீக விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோயிலில் வள்ளித் திருக்கல்யாணம் மட்டும் சீரும் சிறப்புமாகக் கொண்டாடப்படுகிறது.
இதைக் கண்டால் திருமணம் தடைப்படுகிறவர்களுக்குக் கூட விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம்,
திருத்தணிகை மலை
மலைகளில் சிறந்த மலை ’திருத்தணிகை’ என்று போற்றிக் கூறுகிறது கந்த புராணம்.
திருத்தணிகைக்குச் சென்று முருகப் பெருமானை நினைத்தாலோ அல்லது திருத்தணிகை இருக்கும் திசையில் முருகனை மனதில் நிறுத்தி வணங்கினாலோ,
தணிகை இருக்கும் திசையை நோக்கிப் பத்தடி தூரம் நடந்தாலோ வாழ்வில் அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது சான்றோர் வாக்கு.
சூரபத்மனின் சகோதரனான தாரகாசுரனிடம் இழந்த தனது சக்கராயுதத்தை மகாவிஷ்ணு திருத்தணிகை முருகனை வழிபட்டுதான் திரும்பப் பெற்றார் என்கிறது கோயில் தலபுராணம்.
விஷ்ணு பகவான் உருவாக்கிய விஷ்ணு தீர்த்தத்தில் நீராடி, தணிகைமலை முருகனை வழிபட்டால் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருத்தணி கோயிலில் முருகனுக்கு வேல் கிடையாது என்பது இந்தத் தலத்துக்கே உரிய சிறப்பாகும்.
ஆறுபடை வீடுகளில் திருத்தணியில்தான் உயரமான கருவறை கோபுரம் அமைந்திருக்கிறது.
பல்வேறு சிறப்புகளைக் கொண்ட இந்த அற்புதமான திருத்தணிகைக் கோயிலில்தான் ஆங்கிலப் புத்தாண்டில் படிபூஜை நடைபெறுகிறது.
தினம் ஒரு திருக்கோயில்-திருத்தணிகை
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.