தினம் ஒரு திருக்கோயில்-திருவேற்காடு
ஸ்ரீதேவி கருமாரி அம்மன் திருக்கோயில், திருவேற்காடு
சூரியனுக்கு அருளிய அம்பிகை
ஸ்ரீதேவி கருமாரி அம்மன் நிகழ்த்தியுள்ள பல்வேறு திருவிளையாடல்களில், சூரியனுக்கு ஏற்பட்ட அனுபவத்தைப் பற்றி அறிந்து கொள்வோம்.
ஒரு நாள், அம்பிகை குறி சொல்லும் நாடோடிப் பெண்ணின் உருவத்தை எடுத்து, சூரியனிடம் சென்று, அவனின் எதிர்காலத்தைக் கணித்துச் சொல்வதாகச் சொன்னார்.
ஆனால், தன் எதிரே வந்திருப்பது, தேவி கருமாரி அம்மன் தான் என்பதை உணராத சூரியன், அம்பிகையை உதாசீனப்படுத்தினான்.
கோபமடைந்த அம்மனும், சூரியனை சபிக்க, அவன் தன் பிரகாசத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கத் தொடங்கினான். மேலும், தேவியின் சாபத்தால், அவனின் பெருமையும் குன்றியது.
தனது தவறை உணர்ந்து திருந்திய சூரியனும், அம்பிகயை மனமுருகப் பிரார்த்தித்து, தன்னை மன்னித்தருளும்படி வேண்டிக் கொண்டான்.
ஸ்ரீதேவி கருமாரி அம்மனும், சூரியனின் பிரார்த்தனையால் மனம் குளிர்ந்து, அவனை மன்னித்தருளினார். மேலும், சூரியன் பிரார்த்தித்துக் கொண்டபடி, ஞாயிற்றுக் கிழமையை
தனக்கு மிகவும் உகந்த நாளாக ஆக்கிக் கொள்வதாகவும், வருடத்திற்கு இரு முறை, அதாவது, புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாகத் தன் தலையின் மீது படவும் வரமளித்தார்.
இதன் காரணமாகவே, ஞாயிற்றுக் கிழமை அம்பிகைக்கு மிகவும் உகந்த நாளாக அமைந்துள்ளது.
மேலும், வருடந்தோறும், புரட்டாசி மற்றும் பங்குனி மாதங்களில், சூரியோதயத்தின் போது, சூரியனின் பொன்னிறக் கதிர்கள் நேரடியாக அம்பிகையின் தலையின் மீது படுவதை நாம் கண்டு களிக்க முடிகிறது.
தமையனைத் தன்னுடன் எழுந்தருளச் செய்தல்
முன்னொரு காலத்தில், வைகுண்டத்தில் வாசம் செய்யும், திருமால் தனது தங்கையான, தேவி கருமாரி அம்மன் திருவேற்காட்டில் அருளாட்சி செய்வதை காண நேரடியாக வருகை புரிந்தார்.
தமையனின் வருகையால் மனமகிழ்ந்த அம்பிகை, அவரைத் தனது அருகிலேயே, தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, திருமலை ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், நவக்கிரகங்களை தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு அருள வேண்டும் என வேண்டிக் கொண்டார்.
தமையனும், அப்படியே செய்வதாக, அம்பிகைக்கு வாக்களித்தார்.
திருமாலும், தங்கைக்கு வாக்களித்தப்படியே, திருவேற்காட்டில், ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக் கோலத்தில், தெற்குத் திசை நோக்கி நின்றபடியே, பக்தர்களுக்கு அருள் வழங்கி வருகிறார்.
அவ்வாறே, திருவேற்காட்டில் அம்பிகையையும், ஸ்ரீநிவாசப் பெருமாளையும் ஒரே நேரத்தில் தரிசனம் செய்த வேத வியாச முனிவர் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை.
பிரார்த்தனைகளும் நேர்த்திக் கடன்களும்
அன்னையின் அருளால் இங்கு வரும் பக்தர்களுக்குத் திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி ஆகியவற்றைத் தருகிறது.
தீராத நோய்களைத் தீர்த்தருளும் வேப்பிலையை மக்கள் அன்னையிடமிருந்து பக்தியுடன் பெற்றுச் செல்கின்றனர்.
வேப்பிலையும் பிரம்பும் கொண்டு மந்திரிக்கப்பட்டு பில்லி, சூன்யம், மனநோய் போன்றவை நீங்கப்பெறுகின்றனர்.
ராகு கேது கிரக தோசம் உள்ளவர்கள் புற்றில் பால் ஊற்றினால் அம்மாதிரியான தோசங்கள் விலகுகின்றன.
பௌர்ணமி தோறும் 108 சுமங்கலி பெண்களால் மாலை வேளையில் 108 திருவிளக்கு பூஜை செய்யப்படுகின்றது.இந்தப் பூஜையைச் செய்பவர்கள் அவரவர் ஈடுபாட்டிற்கு ஏற்ப பலன்களை அடைந்து வாழ்வில் உயர் நிலை பெறுகின்றனர்.
புற்றில் பாலூற்றி வழிபடுவோர்க்கு வாழ்வு அளித்து இராகு கேது போன்ற கிரகங்களால் வரும் தோஷங்களை நீக்குவேன் என்பது அன்னையின் அருள் வாக்கு.
இவை தவிர முடிகாணிக்கை, தேர் இழுத்தல், குங்கும அபிசேகம், மாலை சாத்துதல், சங்காபிசேகம், கலசாபிசேகம், கல்யாண உற்சவம், பொங்கல் வைத்தல், அங்கப்பிரதட்சணம் , கண்ணடக்கம் ஆகியவை முக்கிய நேர்த்திக் கடன்களாகப் பக்தர்களால் அம்மனுக்குச் செலுத்தப்படுகிறது.
தலப் பெருமைகள்
இங்கு தேவி கருமாரி அம்மன் சுயம்புவாக, நாகப்புற்றுள் எழுந்தருளியுள்ளார். மேலும் ”மரச்சிலை அம்மன்” என்ற சன்னதி இத்தலத்தில் உண்டு.
தினம் ஒரு திருக்கோயில்-திருவேற்காடு
- மூலவர்: ஸ்ரீதேவி கருமாரி அம்மன்
- பெருமை : சுயம்பு
- சிறப்பம்சம் : நாகபுற்று
- வழிபாடு : விளக்குபூஜை
- தலமரம் : வெள்வேலம்
- தீர்த்தம் : புஷ்கரணி
- பதிகம் : சம்பந்தர் தேவாரம்
- புராணபெயர் : வேலங்காடு
#ஸ்ரீதேவி கருமாரி அம்மன் #வேலங்காடு #திருமண வரம், குழந்தை வரம், வியாபார வளர்ச்சி #வேத வியாச முனிவர் #108 திருவிளக்கு பூஜை #108 சுமங்கலி பெண்கள்
பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.