தினம் ஒரு திருக்கோயில்-அரங்கநாதர்

Date:

Share post:

தினம் ஒரு திருக்கோயில்-அரங்கநாதர்

அருள்மிகு அரங்கநாதர் கோயில்
மூலவர் அரங்கநாதர்
உத்ஸவர் நம்பெருமாள்
தாயார் அரங்கநாயகி
திருக்கோலம் புஜங்கசயனம், தெற்கே திருமுக மண்டலம்
தீர்த்தம் சந்திரபுஷ்கரணி, காவிரி, கொள்ளிடம், தேவசுரங்கம்
விமானம் ப்ரணவக்ருதி விமானம்
தல விருட்சம் புன்னை மரம்
மங்களாசாசனம் பெரியாழ்வார், ஆண்டாள், குலசேகராழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார், தொண்டரடிப் பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், பேயாழ்வார், பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், நம்மாழ்வார்
இருப்பிடம் ஸ்ரீரங்கம், தமிழ்நாடு
வழிகாட்டி
திருச்சியிலிருந்து பேருந்து வசதி உள்ளது. தமிழ்நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்தும் சாலை மற்றும் இரயில் போக்குவரத்தில் இணைக்கப்பட்டுள்ளது. 10 கி.மீ. தொலைவில் விமான நிலையம் உள்ளது.
தலச்சிறப்பு
108 வைஷ்ணவ திவ்ய தேசங்களில் முதன்மையானது.

வைஷ்ணவர்களால் ‘கோயில்’ என்றும், ‘பூலோக வைகுண்டம்’ என்றும் அழைக்கப்படும் இந்த ஸ்தலம் தானாகவே தோன்றியதாக கருதப்படும் எட்டு சுயம்பு க்ஷேத்திரங்களுள் முக்கியமானது. பதினொரு ஆழ்வார்களாலும் மங்களாசாசனம் செய்யப்பட்ட க்ஷேத்திரம். ஏழு பிரகாரங்களைக் கொண்ட மிகப்பெரிய கோயில். அயோத்தியில் இராமனின் பட்டாபிஷேகம் முடிந்தவுடன், தனது முன்னோர்களால் பிரம்ம தேவனிடம் இருந்து பெறப்பட்டு பூஜை செய்து வந்த பெருமான் விக்கிரகத்தை இராமபிரான் விபீஷணனிடம் கொடுத்தார்.

விபீஷணன் இலங்கைக்குச் செல்லும் வழியில் காவிரி மற்றும் கொள்ளிடம் ஆகிய இரண்டு நதிகளுக்கிடையே உள்ள ஒரு இடத்தில் விக்கிரகத்தை வைத்துவிட்டு சிறிது நேரம் ஓய்வெடுத்தான். மீண்டும் எடுக்க முயற்சி செய்தபோது விக்கிரகத்தை எடுக்க முடியாமல் சோர்வுற்றான். தாம் அங்கேயே இருக்க விரும்புவதாகவும், ஆண்டுக்கு ஒருமுறை வந்து தன்னை தரிசனம் செய்து செல்லும்படியும் பகவான் பணித்தார். இப்பகுதியே காலப்போக்கில் பெரியதொரு கோயிலாக மாறி ‘திருவரங்கம்’ என்று பெயர் பெற்று விளங்குவதாகக் கூறுவர்.

மூலவர் ஸ்ரீரங்கநாதன் என்ற திருநாமத்துடன் புஜங்க சயனம், தெற்கே திருமுக மண்டலத்துடன் ஸேவை சாதிக்கின்றார். உத்ஸவர் திருநாமம் நம்பெருமாள். தாயார் ஸ்ரீரங்க நாயகி என்று வணங்கப்படுகின்றார். சந்திரன், விபீஷணன், தர்மவர்மா, ரவிதர்மன் ஆகியோருக்கு பகவான் பிரத்யக்ஷம்.

தொண்டரடிப்பொடியாழ்வார் நந்தவனம் அமைத்து கைங்கர்யம் செய்த க்ஷேத்திரம். திருமங்கை ஆழ்வார் திருமதில் அமைத்து கைங்கர்யம் செய்த க்ஷேத்திரம். ஸ்ரீராமானுஜர் பல்லாண்டுகள் இங்கு தங்கி நம்பெருமாளுக்கு கைங்கர்யம் செய்த ஸ்தலம். வடக்குத் திருவீதிப் பிள்ளை, பிள்ளைலோகாசார்யார், பெரிய நம்பி ஆகியோர்களின் அவதார ஸ்தலம்.

கம்பர் தனது இராமாயணத்தை அரங்கேற்றிய தலம், கம்பராமாயண அரங்கேற்றத்தின்போது சிரக்கம்பம் செய்து ஆமோதித்த ‘மேட்டு அழகிய சிங்கர்’ என்னும் நரசிம்ம மூர்த்திக்கு இங்கு தனி சன்னதி உள்ளது. ஸ்ரீமந் நாதமுனிகளால் உருவாக்கப்பட்ட திவ்ய பிரபந்தத்தை ராகதாளங்களுடன் பாடும் முறையான ‘அரையர் சேவை’ இங்கு நடந்து வருகிறது. தன்வந்திரி பகவான் சன்னதி இத்தலத்தில் உள்ளது.

ஸ்ரீஅஹோபில மடம் 44வது ஜீயரின் பெருமுயற்சியால் உலகிலேயே மிக உயரமான கோபுரமாக 236 அடி உயர இராஜகோபுரம் கட்டி முடிக்கப்பட்டது. இந்த இராஜகோபுரம் 13 நிலைகளையும், 13 கலசங்களையும் கொண்டது.

பெரியாழ்வார் 35 பாசுரங்களும், ஆண்டாள் 10 பாசுரங்களும், குலசேகராழ்வார் 31 பாசுரங்களும், திருமழிசை ஆழ்வார் 14 பாசுரங்களும், தொண்டரடிப் பொடியாழ்வார் 55 பாசுரங்களும், திருப்பாணாழ்வார் 10 பாசுரங்களும், திருமங்கையாழ்வார் 73 பாசுரங்களும், பொய்கையாழ்வார் ஒரு பாசுரமும், பூதத்தாழ்வார் 4 பாசுரங்களும், பேயாழ்வார் 2 பாசுரங்களும், நம்மாழ்வார் 12 பாசுரங்களுமாக மொத்தம் 247 பாசுரங்களால் இத்தலம் மங்களாசாசனம் செய்யப்பட்டுள்ளது.

காலை 6 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் கோயில் நடை திறந்திருக்கும்.

 

நவ தீர்த்தம்
  1. சந்திர புஷ்கரணி
  2. வில்வ தீர்த்தம்
  3. சம்பு தீர்த்தம்
  4. பகுள தீர்த்தம்
  5. பலாச தீர்த்தம்
  6. அசுவ தீர்த்தம்
  7. ஆம்ர தீர்த்தம்
  8. கதம்ப தீர்த்தம்
  9. புன்னாக தீர்த்தம்

கோயில் அமைப்பு

இக்கோயிலானது ஏறத்தாழ 156 ஏக்கர் அதாவது 6,31,000 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக, நாட்டிலேயே மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாக உள்ளது.

இதன் வெளிப்புறச் சுற்று மதிலின் அளவு 950 x 816 மீட்டர் ஆகும். இதற்குள் ஒன்றுக்குள் ஒன்றாக ஏழு சுற்று மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மையப் பகுதியில் அரங்கநாதசுவாமி கோயில் உள்ளது. இது தெற்கு நோக்கிய வண்ணம் அமைந்துள்ளது.

அரங்கநாதரின் கருவறை விமானம் நீள்வட்ட வடிவில் தங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கிறது.

கோயிலிலிருந்து நான்கு திசைகளிலும் வெளிப்புறம் நோக்கிச் செல்லும் வகையில் சுற்று மதில்களில் ஒரே வரிசையில் கோபுர வாயில்கள் காணப்படுகின்றன.

இராஜகோபுரத்தோடு கூடிய பிரதான வாயில் தெற்குப் பக்கத்தில் அமைந்துள்ளது. கோயிலைச் சுற்றி உட்புறமாக அமைந்துள்ள நான்கு சுற்றுக்களும் கோயில் சார்ந்த பயன்பாடுகளுக்கு உரியவை.

வெளிப்புறமாக உள்ள மூன்று சுற்றுக்களுக்குள்ளும் வீடுகள், வணிக நிறுவனங்கள், தெருக்கள் என்பவை கொண்ட முழு நகரமும் அடங்கியுள்ளது.

தினம் ஒரு திருக்கோயில்-அரங்கநாதர்

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

சிந்திங்க9

பிறந்தநாள்/திருமண நாள் வாழ்த்துக்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

Related articles

செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமின் கோரிய மனு மீது சென்னை உயர்நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில்...

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்!

காணமால் போன அப்பத்தா ஓநாயாய் முறைக்கும் குணசேகரன் எகிறும் எதிர்நீச்சல்! தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிப்பரப்பபட்டாலும் திடீரென்று ஒரு சீரியல் மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும்....

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள்

சனி பகவானால் பணமழையில் நனையபோகும் 4 ராசிகள் சூரிய பகவானின் மனைவியான உஷா தேவி ஒரு சிறந்த சிவபக்தையாவார். அவருக்கு தன்னுடைய பலம் குறைந்து கொண்டே...

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம்

ஊட்டியில் 15 மணி நேரத்தில் உருவாக்கப்பட்ட பாலம் நீலகிரி இதன் இயற்கை அழகு மற்றும் இனிமையான காலநிலையின் காரணமாக ஐரோப்பியர்களை கவர்ந்த இடமாக இருந்தது. 1818 ஆம்...