பட்டுப் புடவைகள் இயற்கை வண்ணத்தில்
பட்டுப் புடவைகள்
ஜீன்ஸ், டீஷர்ட், கவுன்ஸ், பலசோ என மார்டர்ன் உடைகள் பல இருந்தாலும் பண்டிகை மற்றும் விசேஷ நாட்களில் அனைத்து தலைமுறை பெண்களும் விரும்புவது புடவையைதான்.
இதில் பல டிசைன்கள் இருந்தாலும் பெண்கள் பெரும்பாலும் விரும்புவது எடை குறைவான, வண்ணங்கள் நிறைந்த மற்றும் டிரண்டியான புடவையினை தான் அணிய விரும்புகிறார்கள்.
அவர்களின் தேவையை அறிந்து இந்த பண்டிகைக்கு இரண்டு ரக புடவையினை அறிமுகம் செய்துள்ளனர் ஆர்.எம்.கே.வி பட்டு நிறுவனம்.
இவர்களின் புதுரக புடவைகள் குறித்து விவரித்தார் ஆர்.எம்.கே.வியின் நிர்வாக இயக்குனர் சிவகுமார்.
‘‘நாங்க எப்போதுமே வாடிக்கையாளர்களின் தேவைகள் அறிந்து தான் செயல்பட்டு வருகிறோம்.
காரணம் அவர்களுக்கு என்ன தேவை என்பதை எங்களிடம் வெளிப்படுத்தும் போது, அதை அலட்சியமாக எடுத்துக் கொள்ளாமல், அது குறித்து ஆய்வு செய்வதற்காகவே எங்களின் ஆய்வுக்குழு இயங்கி வருகிறது.
அதன் அடிப்படையில் தான் எங்க புடவைகளின் டிசைன்களில் பல மாற்றங்களை எங்களின் நெசவாளர்கள் மூலம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்.
கடந்த 30 வருடமாக பட்டுத் தொழிலில் ஈடுபட்டு வரும் நாங்கள் பல விதமான புடவை ரகங்களை அறிமுகம் செய்திருக்கிறோம்.
புடவை ரகங்கள்
அதில் குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், ஹம்சாதமயந்தி, ஐஸ்வர்யாபூக்கள், சின்னஞ்சிறுகிளியே, தர்பார் கிருஷ்ணா, குரல் ஓவியம், ரிவர்சபில் புடவை, 50 ஆயிரம் நிற புடவை, வர்ணஜாலம் போன்ற பட்டுப் புடவைகள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.
இதன் வரிசையில் இந்த பண்டிகைக்கு நேச்சுரல் பட்டு மற்றும் லினோ லைட் பட்டு என இரண்டு ரக பட்டுப்புடவைகளை அறிமுகம் செய்திருக்கிறோம்.
கடந்த இரண்டு வருடம் கோவிட் காலம் என்பதால், நாங்க எந்த ஒரு புது ரக புடவைகளையும் அறிமுகம் செய்யவில்லை.
அந்த இரண்டு ஆண்டு காலத்தினை இந்த இரண்டு புடவைகள் குறித்த ஆய்விற்காக பயன்படுத்திக் கொண்டோம். 1856ல் தான் செயற்கை சாயங்கள் அறிமுகமானது.
அந்த காலம் வரை இயற்கை சாயங்களை தான் நாம் பயன்படுத்தி வந்தோம். இயற்கை முறையில் சாயங்களை தயாரிப்பது அவ்வளவு சுலபம் கிடையாது.
ஒவ்வொரு நிறங்களை கொண்டு வர தனிப்பட்ட முறைகளை நாம் கடைப்பிடிக்க வேண்டும். அது ஒரு நீண்ட பிராசெஸ் என்பதால் செலவும் அதிகம். செயற்கை சாயங்கள் மார்க்கெட்டில் வந்த பிறகு அதன் செலவு குறைவு மற்றும் எளிதான முறையில் தயாரிக்கப்படுவதால், இயற்கை சாயங்களின் மாற்றாக இதை பயன்படுத்த ஆரம்பித்தார்கள்.
ஆனால் காலப்ேபாக்கில் இவை நம்முடைய சுற்றுப்புற சூழலுக்கு பெரிய பாதிப்பினை ஏற்படுத்த ஆரம்பித்தது. அதை புரிந்து கொண்டு நாங்களும் கொஞ்சம் கொஞ்சமாக இயற்கை சாயங்களை பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினோம். அதனால் அதற்கான ஆய்வில் இறங்கினோம். எந்த இயற்கை பொருட்கள் மூலம் என்ன வண்ணங்களை கொண்டு வரலாம்ன்னு ஆய்வு செய்தோம். மேலும் இரண்டு நிறங்களை சேர்த்தால் வேறு என்ன நிறம் உருவாக்க முடியும் என்பதையும் கண்டறிந்தோம்.
அதன் அடிப்படையில் தற்போது 45 வண்ணங்களை நாங்க உருவாக்கி இருக்கிறோம். மேலும் வண்ணங்களை உருவாக்கும் ஆய்வில் ஈடுபட்டு வருகிறோம். இப்படி பல ஆய்வுகளுக்கு பிறகு உருவானது தான் எங்களின் நேச்சுரல் பட்டுப் புடவைகள். இந்த புடவைகளின் ஒவ்வொரு இழையும் இயற்கை சாயங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டு நெசவாளர்களின் கைகளால் நெய்யப்படுகிறது. நாம் நினைத்து பார்க்க முடியாத இயற்கை பொருட்களில் இருந்து வண்ணங்களை உருவாக்க முடியும் என்று நினைக்கும் போது ஆச்சரியமாகவும் அதிசயமாகவும் உள்ளது’’ என்றவர் இதில் பயன்படுத்தப்பட்ட நிறங்கள் குறித்து விவரித்தார்.
இயற்கை வண்ணம்
‘‘நீலம், சிகப்பு, சாப்ரான், அரக்கு, பச்சை, பிங்க் என பல வண்ணங்களை நாங்க எங்களின் புடவையில் அறிமுகம் செய்திருக்கிறோம். அவுரி இலையை கொண்டு இண்டிகோ நிறம், மாதுளை பழத்தின் ஓட்டில் இருந்து இளம் சிவப்பு, அரக்கில் அடர் சிவப்பு, சாமந்திப்பூ மஞ்சள் நிறம், மல்பெரி இலை பச்சை நிறம், கருவேலம்பட்டையில் பிரவுன், பதிமுக மரம் பேபி பிங்க் என பலதரப்பட்ட நிறங்களை உருவாக்கி இருக்கிறோம். மேலும் இந்த நிறங்களைக் கொண்டு எங்களின் நேச்சுரல் புடவையில் பல டிசைன்களை அறிமுகம் செய்திருக்கிறோம். எங்களின் அடுத்த கலெக்ஷன் லினோ பட்டுப் புடவைகள்.
இன்றைய தலைமுறையினருக்காகவே அறிமுகம் செய்திருக்கிறோம். காரணம் இவர்களுக்கு பட்டுப்புடவைகள் உடுத்த விருப்பமாக இருக்கும். ஆனால் அதன் எடை அதிகம் காரணமாக தவிர்த்துவிடுவார்கள். அதற்காகவே எடை குறைவான மற்றும் மெல்லிய இழைகொண்ட மீனாக்காரி டிசைன்களில் இந்த லினோ பட்டுப்புடவையினை அறிமுகம் செய்திருக்கிறோம்’’ என்றார் சிவகுமார்.இந்த தீபாவளியை இயற்கை நிறங்கள் கொண்டு வண்ணமயமாக்குவோம்.
மாங்காடு காமாட்சியம்மன் கோவிலை பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு