முதுமையில் ஆனந்தம்
வாழ்வியல் குறிப்புகள்!
முதுமையில் பொருத்தமான, பாதுகாப்பான, வசதியான தடையற்ற வசிப்பிட சுற்றுச்சூழலை அமைக்க வேண்டியது தொடர்பான புரிதல் தற்போதுதான் உருவாகிவருகிறது. இது தொடர்பான வாழ்வியல் மாற்றுகள் என்னென்ன என்று பார்ப்போம்.
பயன்படுத்தும் வசதி
அனைத்து வசிப்பிடமும் இளைஞர், முதியோர் மற்றும் எல்லாவிதமான நபர்களுக்கும் ஏற்ற வகையில் கட்டப்பட வேண்டும். வசிப்பிடச் சூழல் வீட்டின் அனைத்து வசதிகளையும் இளைஞர், முதுமையில் மற்றும் எல்லா விதமான நபர்களும் சுலபமாகப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கட்டப்பட வேண்டும்.
தற்காப்பு
கட்டப்பட்ட வசிப்பிட வடிவமைப்புச் சூழல் அனைவரும் சுலபமாக நுழைந்து, எங்கு செல்ல வேண்டுமோ அங்கு சுலபமாக செல்ல முடிகிற வகையில் இருக்க வேண்டும். மேலும் திடீரென்று ஏற்படும் பேரழிவு மற்றும் இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும் சமயங்களில் சுலபமாக இடத்தைக் காலி செய்யும் வசதி இருக்க வேண்டும் என்பதும் மிக மிக முக்கியம்.
சரிவுப் பாதைகள்
இவை சக்கர நாற்காலி, வாக்கர்கள் பயன்படுத்தும் முதியோருக்கு கட்டிடத்திற்குள் போகவும் வெளியே வரவும் உதவும். எனவே, சரிவுப் பாதைகளின் சாய்வு 1:12 க்குக் குறைவாக இருக்கக் கூடாது. குறைந்தபட்ச அகலம் 120 செமீ மற்றும் அதிக பட்ச அகலம் 6 மீட்டர்கள் இருக்க வேண்டும்.
அதன் பிறகு தரையிரங்கும் வழிக்கு ஏறக்குறைய 180 செமீ இடம் ஒதுக்கப்பட வேண்டும். சாய்வுப் படிக்கட்டுகளில் இரண்டு பக்கங்களிலும் 10 செமீ உயரமுள்ள கைப்பிடிகள் பொருத்தப்பட வேண்டும்.
கதவுகள்
சக்கர நாற்காலி அல்லது வாக்கர்கள் நுழையும் விதமாக அனைத்துக் கதவுகளும் குறைந்தபட்சம் 80 செமீ அகலம் இருக்க வேண்டும். தெளிவான, குறைந்தபட்சம் 150 செமீ x 150 செமீ அளவுள்ள இடம் முன்னாலும் அந்தளவுள்ள இடம் அதற்கு அப்பாலும் விடப்பட வேண்டும்.
கதவுகள், ஜன்னல்கள் முதியோருக்கு இயக்குவதற்கு எளிதாக உள்ள பொருள்களால் செய்யப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் மற்றும் ஜன்னல்களின் பூட்டுகளைத் திறக்கவோ அல்லது மூடவோ மணிக்கட்டு அல்லது விரல்களின் பயன்பாடு அவசியமாக இருக்கக் கூடாது. லீவர் வகை கைப்பிடிகள் மிகவும் சவுகரியமானவை.
மாடிப் படிகள்
கட்டடங்களின் மாடிப்படிகள் நீளம் 150 செமீ, கால் வைக்கும் இடத்தில் அளவு 300 செமீ. இருக்கும் படிகள் முதியோர்களுக்குக்கூட ஏற, இறங்க வசதியாக இருக்கும். மாடிப்படிகளின் இரு பக்கங்களிலும் உள்ள சுவற்றில் கைப்பிடிகள் இருப்பது அவர்களுக்கு மேலும் சுலபமானதாக இருக்கும்.
படிகளின் இடையே திறந்த இடைவெளி இருப்பது முதியோர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும். அவர்களுடைய கால்களோ அல்லது வாக்கிங் ஸ்டிக்குகளோ அதில் மாட்டிக்கொண்டு தடுமாறி விழும் வாய்ப்பு உள்ளது.
படிகளின் உயரம் சாய்வாக இருந்தால் நல்லது. கால் வைக்கும் இடம் வழுக்காத தரையாக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் அவற்றின் முனைகளில் வழுக்காத சட்டங்கள் அமைக்கப் பட்டிருக்க வேண்டும்.
பார்வைக் குறைபாடு உள்ள முதியோர்களுக்காகப் படிகளின் நீள அகலங்களில் எதிரும் புதிருமான வண்ணங்களைப் பூசுவது அவர்கள் படிகளைத் தெளிவாகப் பார்க்க உதவியாக இருக்கும்.
நடைபாதை
பொது இடங்களில், நடைபாதை அளவுகளில் மாற்றங்களைப் பொருத்து, கையால் பிடித்துக்கொள்ளும் விதத்தில் சங்கிலிகள் தொங்கவிடப்பட வேண்டும்.
இந்த நடைபாதைகள் தொடர்ச்சியாகவும், சக்கர நாற்காலியில் போகும் அளவுக்கு அகலமாகவும் இருக்க வேண்டும்.
சில இடங்களில் மற்றொரு சக்கர நாற்காலி கடந்து போக வசதியாகக் கூடுதல் அகலமாக இருக்கலாம்.
முதியோர்கள் சுயமாக அங்கும் இங்கும் போய் வர, வீடுகளின் நடைபாதைகளில், காரிடார்களில், தோட்டத்திற்குச் செல்லும் பாதைகளில், பார்க்குகளில் உறுதியான கைப்பிடிகள் இரு பக்கங்களிலும் அமைப்பது அவர்கள் நடமாட்டத்திற்கு மேலும் உதவிகரமாக இருக்கும்.
கழிப்பறைகள்
வீட்டில் குறைந்தபட்சம் ஒரே ஒரு கழிப்பறையாவது வாக்கர், சக்கர நாற்காலி முதலியவற்றை உபயோகிப்பவர் நுழையும் விதத்திலும், கதவை மூடிக்கொண்டு, தங்களைக் கழிப்பிட இருக்கையில் அமர்த்திக் கொள்ளும் வகையில் பெரிதாகக் கட்டப்பட வேண்டும்.
சக்கர நாற்காலியை இயக்க இடம், குறைந்தபட்சம், 150 செ.மீ மற்றும் அதைத் திருப்புவதற்கான இடம் 2.2 சதுர அடிகளை ஒதுக்கப்பட்டிருக்க வேண்டும்.
கழிப்பிடங்களில், சிறுநீர் கழிக்கும் இடங்கள், கை கழுவும் பேசின்கள் மற்றும் ஷவர் இடங்கள் போன்ற முதியோருக்கு உதவும் வகையில் பொருத்தமான இடங்களில் கைப்பிடிகள் (இரும்பினால் ஆனது நல்லது) அமைக்கப்பட வேண்டும்.
சக்கர நாற்காலியில் இயங்கும் நபர்கள் எளிதாக அடையும் விதத்தில் கழிப்பறைக்குத் தேவையான அனைத்துப் பொருள்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
கழிப்பறை மற்றும் சமையல் அறைகளில் உள்ள டைல்ஸ்கள் வழுக்காத தன்மை உடையதாக இருக்க வேண்டும்.
சுத்தம் & பாதுகாப்பு
முதியோர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைந்து போவதால், வழ வழப்பான சுவர்கள் அமைப்பது நல்லது.
அவற்றில் தூசி தங்குவது மிகவும் குறைவாக இருப்பதால், அவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பும் குறைகிறது.
சுவர்கள், கதவுகள், ஜன்னல்கள், மேஜை, நாற்காலிகள் ஆகியவற்றின் முனைகளை உருண்டையாக அமைத்தால் முதியோர் காயம் பட்டுக்கொள்வது மிகவும் குறையும்.
பெண் சட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு