இயற்கை குளியல்கள்
பஞ்சபூத தத்துவக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டது இயற்கை மருத்துவம். அதில் மருத்துவ நெறிகளாக பல விஷயங்கள் குறிப்பிட்டுச் சொல்லப்பட்டுள்ளன.
குறிப்பாக, மனிதனின் அன்றாட பழக்கவழக்கங்களைத் தத்துவார்த்த புரிதலுடன் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் முக்கியமானது உடல்சுத்தம் என்னும் குளித்தல். மனித சமூகத்தில் குளித்தலுக்கு நெறி அமைத்து பழகி வந்தது தமிழ்ச் சமூகம் மட்டுமே.
இயற்கை குளியல்கள் என்பது இயற்கை மருத்துவ முறைப்படி மருத்துவக் குளியல் முறைகள். அவற்றின் பயன்களைத் தெரிந்துகொள்ளலாம்.
சூரியக் குளியல்
வீட்டு மாடி, திறந்தவெளி மைதானம், கடற்கரை போன்ற இடங்களில் 15 அல்லது 20 நிமிடங்களுக்கு உடல் முழுவதும் வெயில்படுமாறு இருப்பதே சூரியக் குளியல்.
அளவான சூரியக் குளியலால் உடலில் உள்ள கெட்ட நீர் வியர்வைத் துவாரங்கள் வழியாக வெளியேறும். இதன்மூலம் சருமம் உறுதியாவதுடன் ரத்தச்சுழற்சி சீராகும்.
தோலுக்கு வெளியே ஒட்டிக்கொண்டிருக்கும் கிருமிகள் அழியும். உடலில் பித்தம் மற்றும் வெப்ப ஆற்றல் குறைந்தவர்கள் சூரியக் குளியல் எடுத்தால், பித்தத்தின் ஆற்றல் அதிகரிப்பதுடன் வெப்பமும் அதிகரிக்கும்.
உடலின் நச்சுத்தன்மையை நீக்குவதில் சூரியக் குளியலின் பங்கு அபரிமிதமானது. சூரியக் குளியல் ஹார்மோன்களின் சுரப்பை சமன் செய்வதுடன் தூக்கமின்மையைப் போக்கும்.
இயற்கையாகவே சூரிய ஒளி மூலம் வைட்டமின் டி சத்து அதிகமாகக் கிடைப்பதால் சருமம், எலும்பு மற்றும் கண்களுக்கு நல்லது.
ஆகவே கடும் கோடைக்காலங்களில் சூரியக் குளியலைத் தவிர்க்கவும்.
மண் குளியல்
மண் குளியலுக்கு, நிலத்தை மூன்று முதல் நான்கு அடி ஆழத்துக்கு தோண்டி ஆழத்திலிருக்கும் மண்ணை எடுத்துக்கொள்ளலாம். இல்லையென்றால் கறையான் புற்று மண்ணை எடுத்துக் கொள்ளலாம். மண்ணில் கற்களோ ரசாயனக் கலவைகளோ இருக்கக் கூடாது.
நோயாளி அமர்ந்த நிலையிலோ படுத்த நிலையிலோ நீர்விட்டுப் பிசைந்து மண்ணை உடலில் பூசிக்கொள்ள வேண்டும். 45 முதல் 60 நிமிஷங்கள் வரை மண் குளியல் செய்யலாம். மண் குளியல் முடிந்தவுடன் உடலில் பூசிய மண் காய்ந்துவிடும்.
அதை அகற்ற குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரை நோயாளியின் உடல் முழுவதும் தெளிக்கலாம். சளி பிடித்திருந்தால் மண் குளியலைத் தவிர்க்க வேண்டும்.
பயன்கள்
- உடலைக் குளிர்வித்து, நச்சுத்தன்மையை நீர்க்கச் செய்து உறிஞ்சி வெளியே எடுத்துவிடும்.
- பசியின்மை, மனஉளைச்சலால் ஏற்படும் தலைவலி, உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள் போன்றவற்றுக்கும் இந்தச் சிகிச்சை பயன்படும்.
- ரத்த ஓட்டத்தைச் சீராக்கும். உடலில் உள்ள பி.ஹெச் அளவை சமன் செய்யும்.
- சுத்தம் செய்யப்பட்ட மண்ணை 30 நிமிடம் வரை வைத்திருந்து பயன்படுத்தினால் தோலின் அழுக்குகள் நீங்கி பளபளப்பாகும்.
- மண்ணை முகத்தில் பூசி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் சுத்தமாகக் கழுவினால் கரும்புள்ளிகள் மறையும். கண்களுக்குக் கீழ் உள்ள கருவளையங்களைச் சரிசெய்யவும் பயன்படும்.
- கண்களின் மீது பயன்படுத்தினால் கண் படலம், அழற்சி, அரிப்பு, ஒவ்வாமை, விழிநீர் அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வாக அமையும்.
நீராவிக்குளியல்
நீராவிக் குளியலின்போது எளிமையான மெல்லிய உடைகளைப் பயன்படுத்த வேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் வரை நீராவிக் குளியல் எடுப்பது நல்லது. இது உடலில் உள்ள நச்சு மற்றும் கழிவுகளை அகற்ற உதவும். சருமத்துக்குப் புத்துணர்வு அளிப்பதுடன் இளமையை மீட்டுத் தரும். நீராவிக் குளியலுக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே சாப்பிட்டு முடித்திருக்க வேண்டும். இல்லையென்றால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். நீராவி அறையில் வழக்கத்தைவிட உடலின் வெப்பநிலை உயர்ந்து அதிக வியர்வை வெளிவரும் என்பதால் நீராவிக் குளியல் அறைக்குச் செல்வதற்குமுன் தண்ணீர் அதிகம் குடித்துவிட்டுச் செல்ல வேண்டும்.
நீராவிக் குளியல் முடித்ததும் குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும். இதனால் செல்கள் புத்துணர்ச்சி அடையும். தலை, கை, கால், பாதம் எனத் தனித்தனியாக நீராவி சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.
வாழையிலைக் குளியல்
வாழையிலைக் குளியல் என்பது இயற்கை மருத்துவ முறையில் பரிந்துரைக்கப்படும் முக்கிய புற மருத்துவக் குளியலாகும். வாழையிலைக் குளியலை மெல்லிய பருத்தி ஆடைகளை அணிந்துகொண்டு செய்வது நல்லது. உடலின் மேல் வாழை இலைகளைப் போர்த்திக்கொண்டு அதன்மேல் வாழை நார் அல்லது கயிற்றால் கட்டிவிட வேண்டும். சுவாசிப்பதற்காக மூக்குப் பகுதியில் மட்டும் சிறிய துவாரம் ஏற்படுத்திக் கொள்ளலாம். காலை 7 முதல் 9 மணியளவில் வாழையிலைக் குளியல் எடுப்பது நல்லது.
பெண்கள் 10 நிமிடங்களும் ஆண்கள் அரை மணி நேரமும் வாழையிலைக் குளியல் எடுத்துக்கொள்ளலாம். வாழை இலைகளின்மீது சூரியக் கதிர்கள் படுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும். உடலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். கழிவுகள் மற்றும் உடலில் தேங்கிய கொழுப்பு கரைந்து உடல் எடை குறையும். மருத்துவரின் பரிந்துரைப்படி மாதம் ஒரு முறையோ அடிக்கடியோ இதைச் செய்துகொள்ளலாம்.
வாழையிலைக் குளியலுக்கு முன்பு சிறுநீர் கழித்துவிட வேண்டும். எளிய உணவுகளைச் சாப்பிடுவதில் தவறில்லை.
செல்போன் அடிக்ஷன் பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு