மனம் எனும் மாயலோகம்!
மனநல ஆலோசகர் ஜான்ஸி ராணி
போஸ்ட் பார்டம் டிப்ரஷன் (Postpartum Depression) தீர்வுகள்
மகப்பேறுக்கு பிறகான மனம் அழுத்தத்தை கண்டுபிடிக்க, உங்கள் மருத்துவர் உங்களுடன் விரிவாக உரையாடுவதன் மூலமாக உங்கள் மனநிலையை கண்டறிவார். தேவைப்பட்டால் அவர் மனநல நிபுணரைத் தொடர்பு கொள்ளப் பரிந்துரைப்பார்.
மன அழுத்தத்தின் தீவிரத்தைப் பொறுத்து ஆலோசனைகள் மட்டும் போதுமா அல்லது மருந்துகளும் எடுத்துக் கொள்ள வேண்டுமா என்பதை மனநல நிபுணர் முடிவு செய்து, அதற்கேற்ப தகுந்த சிகிச்சை அளிப்பார்.Anti-anxiety அல்லது Antidepressant மருந்துகள், சைக்கோதெரபி மற்றும் Support Group Participation போன்ற முறைகளில் ஏதேனும் ஒன்றையோ அல்லது ஒருங்கிணைந்த சிகிச்சை முறையோ அளிப்பார்.
PPD வராமல் தடுக்க முடியுமா?
- முழுமையாக தடுக்க இயலாது என்றாலும் கீழ்கண்ட இந்தக் குறிப்புகள் உதவும்.
- இது Mood disorderகளில் ஒன்று என்பதை முதலில் புரிந்து கொள்ளுங்கள். இது உங்களுடைய தனிப்பட்ட தவறில்லை. எனவே ‘நான் நல்ல தாய் இல்லையோ!’ என்ற குற்ற உணர்ச்சி தேவையில்லை.
- அதன் சமிக்ஞைகளைப் பற்றிய விழிப்புணர்வு உதவும்.
- பேறு காலத்திற்கு முன்னரே ஒரு திட்டம் வகுத்துவிடுங்கள்.
- குடும்பத்தினரின் பங்களிப்பு குறித்து உரையாடுங்கள்.
- நெருங்கிய நண்பர்கள்/ உறவினர்களிடம் உதவிகள் கேட்கத் தயங்காதீர்கள்.
- உங்களுடைய நலனையும், பச்சிளங்குழந்தையின் நலனையும் முன்னிட்டு, வீட்டில் விருந்தினர்களின் வருகையை தடுத்துவிடுங்கள்.
மனநல சிகிச்சையுடன் இந்தக் குறிப்புகளைப் பின்பற்றுவது விரைந்து நலமடைய உதவும்:
- நீங்களே எல்லாவற்றையும் கையாள முடியும் என்ற அதிக தன்னம்பிக்கை உங்கள் உடல்நலனுக்கும் மனநலனுக்கும் நல்லதில்லை.
- உங்களுடைய எதிர்பார்ப்புகள் – அவை குழந்தையைக் குறித்தோ உங்களைக் குறித்தோ- நடைமுறைக்கு சாத்தியமானவற்றை மட்டும் எண்ணுங்கள்.
- உங்களுக்கென தேவைப்படும் தூக்கம் மற்றும் ஓய்வை எடுத்துக் கொள்ளத் தவறாதீர்கள்.
- உடற்பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குங்கள்.
- வீட்டை விட்டு வெளியில் நடைப்பயிற்சி மேற்கொள்ளும் போது, தற்காலிகமாக குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் பொறுப்பை பிறருக்கு அளிக்கும் போது, மிகுந்த ஆசுவாசம் உண்டாகும்.
- 24×7 என எப்போதும் நீங்கள் மட்டுமே குழந்தையை கவனிக்க வேண்டும் என்ற பொறுப்பு உங்களுக்கு களைப்பை உண்டாக்குவதுடன் மிகுந்த மன உளைச்சலை அளிக்கும். எனவே உங்களுக்கான ‘break’ களை அவ்வப்போது எடுத்துக் கொள்ளுங்கள்.
- அப்போது உங்களுடைய நண்பர்களுடன் இருப்பது, உங்களுக்கு பிடித்த பொழுது போக்குகளில் ஈடுபடுவது உங்களைப் புத்துணர்வு கொள்ளச் செய்யும்.
- குழந்தை வளர்ப்பில் கணவரையும் ஈடுபாடு கொள்ளச் செய்வது நெருக்கத்தையும் பிணைப்பையும் வளர்க்கும்.
- குழந்தை வளர்ப்பில் எல்லா நாட்களும் மகிழ்ச்சியானதல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
ஒருவேளை உங்களுக்கு மகப்பேறுக்கு பிறகான மன அழுத்தம் இருந்து, அதற்கு சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருந்தால் என்ன விளைவுகள் ஏற்படும்?
இவ்வாறு அசட்டையாக இருப்பது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும்.
அவ்விளைவுகள் உங்கள் குழந்தையை,உங்களை, உங்கள் குடும்பத்தினரை பாதிக்கும்.
உங்கள் மனநிலையில் ஏற்படும் சமன்குலைவால் உங்கள் நலனும் குழந்தையின் நலனும் பாதிப்புக்குள்ளாகும்.
உங்களுக்கு குழந்தையை கவனித்துக் கொள்ள முடியாதோ என்ற சந்தேகம் வளரும்.
கவனச்சிதறல் ஏற்படும்.
முடிவுகள் எடுக்கும் திறன் குறையும்.
அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாமல் திணறுவீர்கள்.
பெரும்பாலான நேரம் அதிக பதட்டமுடனும் பயத்துடனும் இருப்பீர்கள்.
தற்கொலை எண்ணங்கள் ஏற்படக்கூடும்.
ஒருவேளை உங்களுக்குத் தெரிந்த பெண்மணிக்கு இந்த மன அழுத்தம் இருக்கிறது என அறிய வந்தால், நீங்கள் அவருக்கு இவ்வாறாக ஆதரவு அளிக்கலாம்.
நீங்கள் இதன் அறிகுறிகளைப் பற்றி எடுத்துச் சொல்லி, மனநல நிபுணரை ஆலோசிக்க அறிவுறுத்தலாம்.
நீங்கள் அவருடைய நெருங்கிய வட்டத்தில் இருக்கும் பட்சத்தில் குழந்தையை கவனித்துக் கொள்வதில் உதவி செய்யலாம். வீட்டு வேலைகளைப் பகிர்ந்து செய்ய முன்வரலாம்.
குறைந்தபட்சம் அவர்கள் பேச்சை காது கொடுத்து கவனிக்க இருக்கிறீர்கள் என்ற ஆறுதலை அளிக்கலாம்.
அசிடிட்டி பற்றி தெரிந்து கொள்ள
சிந்திங்க9 பொருட்களை வாங்குவதற்கு