இயக்குனர் நடிகர் மனோபாலா காலமானார்
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா காலமானார்.
69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரும், தயாரிப்பாளரும், நடிகருமான மனோபாலா உடல்நலக்குறைவால் காலமானார்.
69 வயதாகும் இவர் கல்லீரல் பிரச்சனை காரணமாக கடந்த சில நாட்களாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த சிகிச்சைக்கு மத்தியில் வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில் இயக்குனர் மனோபாலா காலமானார்.
இவர் அரண்மனை, டான், துப்பாக்கி, சீமராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் பிதாமகன் படத்தில் நடித்திருந்த கதாப்பாத்திரம் அனைவராலும் பேசப்பட்டது.
இயக்குனர் பாரதிராஜாவின் புதிய வார்ப்புகள் படத்தில் உதவி இயக்குனராக மனோபாலா பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகாய கங்கை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குனராக மனோபாலா அறிமுகமானார்.
ரஜினி நடித்த ஊர்க்காவலன் படத்தை இயக்கிய மனோபாலா பிள்ளை நிலா, சிறைபறவை, மூடு மந்திரம், கருப்பு வெள்ளை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சதுரங்க வேட்டை உள்ளிட்ட 3 திரைப்படங்களை தயாரித்துள்ளார். இவரது திடீர் மறைவு திரையுலகினரை மட்டுமல்லாது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
அவரது மறைவு ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் மனோபாலா கடைசியாக தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அவரது பதிவுக்கு ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அவரது மகன் ஹரிஷ் தனது தந்தையின் மறைவு குறித்து விளக்கம் அளித்துள்ளார். அவர் பேசியதாவது, “ என் அப்பா நெஞ்சு வலி காரணமாக சிகிச்சை எடுத்து வந்தார்.
இரண்டு வாரமாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்றார் . பிசியோ சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
ஆனாலும் இன்று உயிரிழந்துவிட்டார். நாளை காலை 10 மணிக்கு வளசரவாக்கத்தில் இறுதி சடங்கு நடைபெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் வைக்கப்பட்ட மனோபாலாவின் உடலுக்கு நடிகர் விஜய் நேரில் அஞ்சலி செலுத்தினார்.
தொடர்ந்து மனோபாலாவின் மகன் ஹரீஷ் உள்ளிட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
விஜய் தற்போது நடித்து வரும் ‘லியோ’ படத்தில் மனோபாலாவும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அவரைத் தொடர்ந்து நடிகர் கவுண்டமணி, ஆர்யா, மோகன், ஏ.ஆர்.முருகதாஸ், சிவகுமார், பி.வாசு, ஹெச்.வினோத், மணிரத்னம், சித்தார்த், பி.சி.ஸ்ரீராம் உள்ளிட்ட ஏராளமான திரையுலகினர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பி.வாசு பேசுகையில், “இதயத்திற்கு நெருக்கமான ஒருவரை நான் இழந்திருக்கிறேன். விவேக், மயில்சாமி, இன்று மனோபாலா.
மிகச் சிறந்த நடிகர், இயக்குநர் மனோபாலா. அவர் இறந்த செய்தி கேட்டதும் என் உடல் உறைந்துவிட்டது.
அண்மையில் தான் நானும் மனோபாலாவும் கோயம்புத்தூர் சென்றோம். அவருடன் இருக்கும்போது சிரிக்க வைத்துக்கொண்டேயிருப்பார்.
மனோபாலாவை பிடிக்காது என யாரும் சொல்லமாட்டார்கள். அவருக்கு என் அஞ்சலிகள்” என தெரிவித்துள்ளார்.
சேரன் பேசுகையில், “எங்களுடன் அவர் இருந்த நாட்களில் எப்போதும் எங்களை சிரிக்க வைத்துக்கொண்டிருப்பார்.
இன்றைக்குத்தான் முதன்முறையாக எங்களை அழ வைத்துள்ளார்.
அவரின் இழப்பு அதிர்ச்சியைத் தாண்டி நம்ப முடியவில்லை. எல்லோரிடமும் அன்பு காட்டக்கூடியவர்.
நடிகர், இயக்குநர் என்பதைத் தாண்டி நல்ல மனிதரை இழந்தது தான் வருத்தம். எல்லா பிரச்சினைகளுக்கும் முன்வந்து நிற்பவர்.
உடல்நிலையைத் தாண்டி மன அழுத்தமும் ஒரு காரணம்.
ஒரு படத்தை எடுத்து அதை வெளியிட முடியாமலிருந்த சூழல் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய மன அழுத்தத்தை உண்டாக்கும். சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.
மனோபாலாவுக்கு எனது அஞ்சலிகள்” என்றார்.